Sunday, September 10, 2023

 உணர்வுகளை சிலிர்க்க வைக்கும் வீரமும் விவேகமும் சுய விழிப்புணர்வும் கொண்ட எழுத்துக்கள்.-ஒரு பாராட்டுரை .

  

               இது ஒரு வித்தியாசமான சந்திப்பு.வாழ்க்கையில் முன்னேற,சாதனைகள் படைக்க  புற  காரணங்கள்  தடையாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்தி நான் பேசியும் எழுதியும் வருகிறேன்.அந்த விதத்தில் ஆட்சிமைப்பணிக்கு தயாராகிவரும் ஒரு இளைஞர் சக்திவேல்.அவர் மூலம் அறிமுகமானவர்கள் அவரது குடும்பத்தினர்.எனது  தமிழார்வத்தால் ஈர்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர் சக்திவேலின் 78 வயதான அவரது பாட்டி அன்பு சகோதரி முத்துலட்சுமி அவர்கள்.எனது நூல்கள் பலவற்றை படித்த அவர் இதய வீணையின் இனிய இசையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்..

              திரு கர்னல் கணேசன் அவர்களுக்கு,சகோதரி முத்துலட்சுமி வணக்கத்துடன் எழுதியது.உங்களை மகனாகப் பெற்று வளர்த்த உங்கள் தாய் தந்தை அவர்களுக்கும் எனது முதல் வணக்கங்கள்.ஒரு இராணுவ அதிகாரியாக உங்கள் திறமையைப்பார்த்து பெருமையும் சந்தோஷமும் அடைந்திருப்பார்கள்;வாழ்த்தியிருப்பார்கள் .

                  உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது  என் மனம் பரவச உணர்ச்சியடைகிறது.

               மண் மேடுகள்,வெண்  பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்,எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல் ,இலக்கைத்தேடும் ஏவுகணைகள் புஸ்தகங்களைப் படிக்கும்போது  என்னையறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.ஒவ்வொரு புஸ்தகம் படிக்கும்போதும் தேசாய் பற்றும்,திறமையும்,வீரமும் அதே சமயம் நேர்மையுள்ள ஒரு இராணுவ அதிகாரியாக என்றும் எவ்வளவு பெரிய அதிகாரியாக உங்கள் கூட இருப்பவர்கள் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டும் தைரியமும் உடன் பணி புரியும்கீழானப்  பதவியிலிருப்பவர்களுக்கு உதவி செய்வதில் இரக்க குணத்திலும்  உங்களைப் பார்க்கும்போது ஒரு மேதையாக தியாகத்தின் உருவமாக ,ஆன்மீக வாதியாகப் பார்க்கிறேன்.

               அண்டார்க்டிக்கா என்ற உறைபனி கண்டத்தில் உங்கள் தலைமையில் கப்பலில் புறப்பட்டதிலிருந்து ஒன்றரை வருட காலம் உறைபனி உலகில் உங்கள் குழுவினருடன் பணியாற்றியதை எண்ணிப்பாற்க்கும்போது வெளி உலகம் தெரியாமல் ஒன்றரை வருட காலம் எப்படியிருந்தீர்கள் என்பதை நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

             இலக்கைத்தேடும் ஏவுகணை புஸ்தகத்தில் கடைசி பக்கங்களில் நீங்கள் எழுதியிருப்பதையும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை எழுதும்போது அதற்கு மேற்கோள் காட்டி

                 திருமூலர்,மாணிக்கவாசகர் ,பட்டினத்தார்,வள்ளலார் போன்ற ஆன்மீகப் பெரியோர்களின் படை மேற்கோள் காட்டி படித்த போது  ஐப்பசி சகலமும் கற்று அறிந்த ஒரு சகோதரரை நான் பேரன் சக்திப்பிரபு மூலம் சந்திக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.என்னைப்பொறுத்தவரை நீங்கள் ஒரு அதிசய மனிதர்.தேசப்பற்றும்,குடும்பப்பற்றும்,தெய்வப்பற்றும் நிறைந்த ஒரு சித்தர்.

              தங்கள் துணைவியார் அனந்தலட்சுமி அவர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஒரு மாதம் டெல்லி வேலை விஷயமாக போய்வரவுள்ள கணவன்மார்கள் போவதை நினைத்து மனம் வருந்தி  ஒரு மாதம் தனியாக எப்படியிருப்பேன் (குழந்தைகளுடன் ) என்று எண்ணும்  மனைமார்களைப் பார்த்த நான்  உங்களைப்போல் தன்னலமற்ற ,குடும்பப்பொறுப்புள்ள நல்ல மனமும் ஆன்மீக சிந்தனையும்  உள்ள பெண் மணியையும் என் பேரன் சக்திப்பிரபு மூலம் சந்திக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

உங்கள் இவரைப்பற்றி என்னிடம் பேசும்போது அவனுக்கு உங்கள் வீட்டில் தங்கி படிப்பதற்கு இடம் கிடைத்ததில் மிக மகிழ்ச்சி என்று சொல்லுவான்.நானும் உங்களைப்போல் நல்லவர்கள் கூச தங்கியிருப்பது கடவுளின் வரம் என்றே நினைக்கிறேன்.

வாய்ப்பு  கிடைத்தால் நேரில் சந்திப்போம்.

                     வணக்கம் .!

                                                                     இப்படிக்கு 

                                            உங்கள் உடன் பிறக்காத தங்கை 

                                                        முத்துலட்சுமி.